Father gets 17 years in prison: குழந்தையை விஷம் வைத்துக் கொன்ற தந்தைக்கு 17 ஆண்டு சிறை

விழுப்புரம்: The Villupuram court has sentenced the father who poisoned the child to 17 years imprisonment. குழந்தைக்கு விஷம் வைத்துக் கொன்ற தந்தைக்கு 17 ஆண்டுகள் சிறதண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், தட்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குள்ளகவுண்டர் மகன் புருஷோத்தமன் (வயது 29). இவருடைய மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு 27.8.2012 அன்று திருமணம் நடந்தது. இவர்களுக்கு அர்ச்சனா (7), கவியாஷினி (2) என்ற 2 மகள்கள். புருஷோத்தமன் தனது குடும்பத்தினருடன் சென்னையில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து அங்கு வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு சொந்த ஊரில் கடன் அதிகம் இருந்ததால் அந்த கடனை அடைக்க முடியாத நிலையில் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 12.12.2019 அன்று புருஷோத்தமன், தனது 2 குழந்தைகளையும் சென்னையில் இருந்து அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு செல்ல பேருந்தில் புறப்பட்டு விழுப்புரம் வந்திறங்கினார். பின்னர் விழுப்புரத்தில் உள்ள ஒரு கடையில் பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கிக்கொண்டு அதனுடன் அரை லிட்டர் குளிர்பான பாட்டிலையும் வாங்கி அரசு பேருந்தில் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு அரசூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து புருஷோத்தமன், தனது 2 குழந்தைகளுடன் கீழே இறங்கினார்.

பின்னர் அங்குள்ள மலட்டாற்றுக்கு சென்று குளிர்பான பாட்டிலில் பூச்சி மருந்தை கலந்து தனது 2 மகள்களுக்கும் ஊற்றிக்கொடுத்தார். அந்த குழந்தைகளும், தங்கள் தந்தை குளிர்பானம்தான் தருகிறார் என்று நினைத்து அதை வாங்கிக்குடித்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து 2 குழந்தைகளின் கழுத்தையும் நெரித்துள்ளார். அதில் 2 குழந்தைகளும் இறந்து விட்டன என்று நினைத்து புருஷோத்தமன் வேதனை தாங்க முடியாமல், விஷம் கலந்த குளிர்பானத்தை தானும் குடித்துவிட்டு சென்னையில் இருக்கும் தனது மனைவி சிவரஞ்சனி மற்றும் பண்ருட்டி தட்டாம்பாளையத்தில் உள்ள உறவினர்கள் சிலருக்கு போன் செய்து தகவலைச்சொல்லி தங்களை காப்பாற்றுமாறு கூறினார்.

இதைக்கேட்டு சிவரஞ்சனி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே புருஷோத்தமனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது குழந்தை கவியாஷினி மட்டும் இறந்திருந்தாள். மயங்கிய நிலையில் இருந்த அர்ச்சனாவையும், புருஷோத்தமனையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு இருவரும் உயிர் பிழைத்தனர்.

இச்சம்பவம் குறித்து மனைவி சிவரஞ்சனி, திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் புருஷோத்தமன் மீது போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் வியாழக்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, குற்றம் சாட்டப்பட்ட புருஷோத்தமனுக்கு, பெற்ற மகளை கொலை செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், மற்றொரு மகளை கொலை செய்ய முயன்றதற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், தனக்குத்தானே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக 3 மாதம் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட புருஷோத்தமன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த தீர்ப்பு வழங்குவதற்கு முன்பே புருஷோத்தமன், தனது குழந்தையின் சாவுக்கு தானே காரணமாகி விட்டோமே என்று எண்ணி மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார். தீர்ப்பு கூறப்பட்டதை கேட்டதும் இன்னும் வேதனை தாங்க முடியாமல் புருஷோத்தமன், பெற்ற மகளையே கொன்ற தன்னை தூக்கில் போடுங்கள், நான் உயிருடனேயே இருக்கக்கூடாது என்று கதறி அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.