Elderly man hacked to death near Tiruvallur: திருவள்ளூர் அருகே முதியோர் வெட்டிக் கொலை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவள்ளூர்: Elderly man hacked to death near Tiruvallur. பொன்னேரியில் பட்டப்பகலில் முதியவரை வெட்டிக் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பர்மா நகரைச் சேர்ந்தவர் முதியவர் சுப்பையா (70) . இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவியுடன் அதே பகுதியில் தள்ளு வண்டி சிற்றுண்டி கடையையும் நடத்தி வந்துள்ளார்.

இவரது மனைவி ஊருக்கு சென்றுவிட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தள்ளுவண்டி கடையை திறக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. தள்ளுவண்டி கடையின் அருகே சுப்பையா நேற்று மாலை அமர்ந்திருந்த போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் முதியவர் சுப்பையாவை தலை மற்றும் கைகளில் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயத்துடன் முதியவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முதியவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படும் வழியிலேயே சுப்பையாவின் நிலைமை மோசமடைந்ததால் பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து சுப்பையாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பர்மா நகர் பகுதியில் முதியவர் சுப்பையாவின் வீட்டின் அருகே முனீஸ்வரன் கோவில் உள்ள நிலையில் அதனை நிர்வகிப்பது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், இந்த பிரச்சினையில் கொலை நடந்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சிலரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையின் அருகே முதியவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொன்னேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.