கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் ரகசியமாக பாலியல் (Cottage Owner Arrested) தொழிலில் ஈடுபட்ட காட்டேஜ் உரிமையாளர் மற்றும் பெண் உள்ளிட்ட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நீலகிரி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் ஒரு விவசாயி ஆவார். இவர் தனது தோட்டத்தில் விளையும் காய்கறிகளை மேட்டுப்பாளையத்தில் விற்பனை செய்வது வழக்கம். அதே போன்று நேற்று (டிசம்பர் 30) மேட்டுப்பாளையம் சந்தைக்கு வந்து காய்கறிகளை விற்பனை செய்துள்ளார்.
சற்று களைப்பாக இருந்ததால் கல்லார் என்ற பகுதியில் உள்ள ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான காட்டேஜ் ஒன்றில் ஓய்வு எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ராஜ் சுந்தர் என்பவர் ரிசப்ஷனில் அறை புக்கிங் செய்து கொடுத்திருக்கிறார்.
அந்த சமயத்தில் விவசாயிடம், எங்கள் காட்டேஜில் உல்லாசமாக இருப்பதற்கு அழகான பெண்கள் உள்ளனர் என உள்ளே அழைத்து சென்றுள்ளார். அதுவும் ராஜ்குமாரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். அப்போது ரூ.2,000 கொடுத்தால் பெண்களை வரவழைக்கிறோம் எனக் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயி சந்தோஷ். இது தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ராஜ்குமார், ராஜ் சுந்தர் மற்றும் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்து குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.