சொத்து விவகாரத்தின் காரணமாக ராஜஸ்தானில் கோயில் பூசாரி ஒருவர் உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் கரோலி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ராதா கிருஷ்ணன் கோவிலில் பூசாரியாக இருந்தவர் பாபு லால் வைஷ்னவ். அவருக்கு வயது 55. ராதா கிருஷ்ணன் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தை பூசாரியான பாபு லால் வைஷ்னவ் பராமரித்து வந்துள்ளார்.
இந்த நிலத்தையொட்டிய இடத்தில் அவர் வீடு ஒன்று கட்டுவதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தார். அதன்படி சில தினங்களுக்கு முன்னதாக அந்த இடத்தை சமதளப்படுத்த ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வேலையில் ஈடுபட்டிருந்த போது அந்த நிலம் தங்களுடையது என கோரிய ஒரு தரப்பினர் பாபு லால் வைஷ்னவுடன் பிரச்னையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பூசாரியின் இடம் என கூறப்படும் இடத்தில் பிரச்னையில் ஈடுபட்டவர்கள் குடிசை ஒன்றை எழுப்பினர், தினை விளைவிக்கப்பட்ட இடத்தில் பெட்ரோலால் தீயிட்டு கொளுத்தியதுடன் அங்கு வந்த பூசாரி மீதும் ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பூசாரி பாபு லால் வைஷ்னவ் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீசாரிடம் பூசாரி அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கைல்சா மீனா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.