பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி சிறுவன் தற்கொலை

சத்தியமங்கலம் அருகே பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் அருண். இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடமாக பள்ளிக்கு செல்லாமல் செல்போனில் பஜ்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருந்துள்ளார்.

இதன் காரணமாக அருணின் தந்தை இவரை கோவையில் உள்ள மனநல மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் உள்ள இவரது உறவினர் வீட்டில் கடந்த மூன்று மாதங்களாக தங்க வைக்கப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்குச் சென்று கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் அறிந்து வந்த புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினர் பிரேதத்தை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பஜ்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி சிறுவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது