சென்னை: Chief Minister of Tamil Nadu to inaugurate guard quarters: சென்னையில் ரூ.186.51 கோடி மதிப்பிலான காவலர் குடியிருப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை , கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு வளாகத்தில் 186 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1036 காவலர் குடியிருப்புகளை தமிழக மு.க. ஸ்டாலின் இன்று (8.8.2022) திறந்து வைத்து, 5 காவலர்களுக்கு குடியிருப்புக்கான சாவிகளை வழங்கினார்.
மேலும், உள்துறை சார்பில் 36 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் 32 காவலர் குடியிருப்புகள், 4 காவல் நிலையங்கள், 2 காவல் துறை கட்டடங்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கான 11 குடியிருப்புகள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணியாளர்களுக்கான 80 குடியிருப்புகள், 3 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள் மற்றும் 1 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கான பாசறை, 55 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 253 வீடுகள் ஆகியவற்றை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, சென்னை, புதுப்பேட்டைக்கு சென்று, புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் 100 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 596 காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்து, 5 காவலர்களுக்கு குடியிருப்புக்கான சாவிகளை வழங்கினார்.
காவல் துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல், ரோந்து வாகனங்களை வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சென்னை மாவட்டம் – கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 186 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1036 காவலர் குடியிருப்புகள் :
ஈரோடு மாவட்டம் – பெருந்துறை ஆகிய இடங்களில் 5 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 32 காவலர் குடியிருப்புகள்;
சென்னை மாவட்டம் – எம்.ஜி,ஆர் நகரில் காவல் நிலையம், ஈரோடு மாவட்டம் – ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், கன்னியாகுமரி மாவட்டம் – கோட்டாரில் போக்குவரத்து ஒழங்கு பிரிவு காவல் நிலையம், என 3 கோடியே 73 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 காவல் நிலையக் கட்டடங்கள் ;
நாகப்பட்டினம் மாவட்டம் – வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணி வளாகத்தில் நிர்வாக அலுவலகக் கட்டடம் என 4 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 காவல்துறை கட்டடங்கள்;
3 கோடி ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் அ.கா.விசுவநாதன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சட்டமன்ற உறுப்பினர்கள் மரு. நா.எழிலன், ஐ.பரந்தாமன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் சுனில் குமார் சிங், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் பி.கே.ரவி, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் அ.கா.விசுவநாதன், சென்னை பெருநகர காவல் ஆணையர்சங்கர் ஜிவால் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.