புதுடெல்லி: Reduction in petrol and diesel prices. நாட்டு மக்களுக்கு தீபாவளிபரிசாக பெட்ரோல், டீசல் விலை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போரின் தாக்கத்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 137 நாட்களுக்குப்பின் கடந்த மார்ச் 22ம் தேதி பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்த்தப்பட்டது.
இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களான எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ.100யை தாண்டி விற்பனை செய்யப்பட்டது.
அந்த சமயத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கியபோது, தீபாவளி பரிசாக அதற்கு முந்தைய நாள் இரவு, பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த ஆண்டு ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட போரால், கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்தது. இதனால் 137 நாட்களுக்கு பின், மார்ச் 22-ந் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. பின்னர், தமிழகத்தில் மே 21-ந்தேதி லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், டீசல் 104.77 ரூபாய்க்கும் விற்பனையானது. அன்று, மத்திய அரசு, பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ. 8, டீசல் மீதான வரியை ரூ.6 குறைத்தது.
இதனையடுத்து, தமிழகத்தில் பெட்ரோல் விலை, 102.63, டீசல் விலை ரூ.94.24 ஆக குறைந்தன. இதுவரை 150 நாட்கள் முடிவடைந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படவில்லை. இமாச்சல் பிரதேசத்தில் அடுத்த மாதமும், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், இந்தாண்டின் இறுதியிலும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. எனவே, வரும் தீபாவளிக்கு மக்களுக்கு பரிசாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.