Gold seized at Chennai airport: சென்னை விமான நிலையத்தில் ரூ. 85 லட்சம் மதிப்பு தங்கம், மின்னணு பொருட்கள் பறிமுதல்

சென்னை: Gold, electronic goods worth Rs 85 lakh seized at Chennai airport. சென்னை விமான நிலையத்தில் ரூ. 85 லட்சம் மதிப்பு தங்கம் மற்றும் மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து நேற்று விமானம் மூலம் சென்னை வந்த பயணி ஒருவரை இடைமறித்து சோதனையிட்ட போது, அவரது உடலில் மறைத்து எடுத்து வந்த 509 கிராம் எடை கொண்ட தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.24.88 லட்சமாகும்.

மற்றொரு சம்பவத்தில் துபாயில் இருந்து வந்த பயணி மறைத்து எடுத்து வந்த 348 கிராம் எடை கொண்ட தங்கப் பசை பாக்கெட்டையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.17.01 லட்சமாகும்.

இதேப் போல துபாயில் இருந்து இலங்கை வழியாக நேற்று முன் தினம் சென்னை வந்த பயணி ஒருவரை சோதனையிட்ட போது 729 கிராம் எடை கொண்ட தங்கம், 6 மடிக்கணினிகள், 57 செல்போன்களை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் மின்னணு பொருட்களின் மதிப்பு ரூ.43.15 லட்சமாகும்.

இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை கூடுதல் ஆணையர் கே பி ஜெயகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.