Tn CM letter to Pm: சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப்போட்டிகள்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: Tamilnadu Chief minister letter to prime minister about Asian Beach Games in Chennai: அடுத்த ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த நடவடிக்கைகளை எடுக்க பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஆசிய கடற்கரை விளையாட்டுகள் .(Asian Beach Games), ஆசியா முழுவதிலும் உள்ள விளையாட்டு வீரர்களிடையே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பல்வேறு விளையாட்டுகள் நடைபெறும். இதை ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (OCA) ஏற்பாடு செய்து வருகிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பின், 2வது பெரிய ஆசிய பல்வேறு விளையாட்டு நிகழ்வாக இது உள்ளது. இதுவரை 6 நாடுகள் ஆசிய கடற்கரை விளையாட்டுகளை நடத்தியுள்ளன. விளையாட்டுப் போட்டிகளில் 45 நாடுகள் பங்கேற்றுள்ளன. கடந்த 2020ம் ஆண்டு சீனாவின் சான்யாவில் நடைபெற்றது. அடுத்த ஆசிய கடற்கரை விளையாட்டுகள் 2023ம் ஆண்டு சீனாவின் சன்யா நகரத்தில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக முதல்வர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டமைக்கும் இவ்விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்தமைக்கும் தனது நன்றியை பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் பிரதமர் காட்டிவரும் ஆர்வத்தை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர், சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதுவதற்குரிய ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் வேண்டுகோளையேற்று, 2024 ஜனவரியில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு, 6-5-2022 அன்று தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், இவ்விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான உத்தரவாதங்களை (guaranteeing free passage for the participants to these games along with other guarantees) மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு இதுதொடர்பாக 23-5-2022 அன்று கடிதம் எழுதியுள்ளதாகவும், செப்டம்பர் 2022 இறுதிக்குள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்த உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளதால், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் அதனை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.