Semi-naked attack in Kallakurichi: கள்ளக்குறிச்சியில் வீடு புகுந்து அரைநிர்வாண தாக்குதல்; அதிர்ச்சி சம்பவத்தால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி: House breaking and semi-naked attack in Kallakurichi. கள்ளக்குறிச்சியில் வீடு புகுந்து அரைநிர்வாண தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைசந்தலைச் சேர்ந்தவர் சிவராமன். இவர் வீட்டில் இருந்த போது வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைக்கும் சத்தம் கேட்டது. சற்று நேரத்தில் வீட்டின் அருகிலேயே வசித்து வரும் பழனி என்பவரின் குடும்பத்தினர் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

இவர்களுக்கு இடையே நிலத்தகராறு காரணமாக சிவராமன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறவேண்டும் எனக் கூறி வீடு புகுந்து தாக்கியுள்ளனர்.

வீட்டிலிருந்த சிவராமனை பழனி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தர தரவென வெளியே இழுத்து வந்து அரை நிர்வாணமாக்கி, மின் கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த கொடூரத் தாக்குதலை பார்த்த அக்கம்பக்கத்தினர் கச்சிராயபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் சிவராமனை மீட்டனர். போலீஸ் விசாரணையில், சிவராமன் தரப்புக்கு சொந்தமான இடத்தை பழனி குடும்பத்தினர் தங்களுக்கு தர வேண்டும் என கூறி தாக்குதல் நடத்தியதும், நீதிமன்ற வழக்கு வாபஸ் பெற வேண்டும் என்று கூறி கொலைவெறி தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது.

இதுகுறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கச்சிராயபாளையம் போலீசார், தாக்குதல் நடத்திய பழனி குடும்பத்தை கைது செய்யாமல் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருவதாக சிவராமன் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். காயமடைந்த சிவராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்ட காவல்துறை எஸ்பியிடம் சிவராமன் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.